Friday, February 19, 2010

சொற்பொழிவு

பெண்ணடிமை ஒழிப்பு
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
தீண்டாமை ஒழிப்பு

கோபம் கொப்பளிக்க‌
மேடையில் வாய்கிழியப் பேசிவிட்டு
வீடுதிரும்பினேன் களைத்து

கோபம் அடங்குமா எனப் பார்த்தால்
கொதித்துக் கிளம்பியது மேலும்.

கவிதை வரைகிறாளாம்
கணவனுக்குக் கால் அமுக்கிவிடாமல்

பெண்ணுக்கெதற்கடா பேனா.

அடேய் பொடிப்பயலே
ஓடிப்போய் தீப்பெட்டி வாங்கி வா.
அவசரத்தில் அந்தத் தாழ்ந்த சாதிக்காரன்
கடையில் போய் வாங்கிவிடாதே

குடிக்கிற கால்வயிற்றுக் கஞ்சியிலும்
கைவைத்து விடுவேன்.

சீக்கிரம் வா, இதைக் கொளுத்திவிட்டு,
வேறு வேலை இருக்கிறது எனக்கு.
உரை தயாரிக்க வேண்டும் நாளை மேடையில் பேச.
பாரதியும் நானும்.

No comments: