Wednesday, December 15, 2010

மொபைல் உலகம்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

கொதிக்கிறது அனல்

பாராளுமன்றம் மட்டுமல்ல

என் மனமாளும் மங்கையும்தான்

காரணம் ஒன்றுதான்

சோகம் அங்குதான்

செல்பேசி

மொபைல் ஃபோன்

அட்டா, இதற்குத்தான் எத்தனை ஃபேன்

செல்லுமிடமெல்லாம் பேச்சு

அதுவே பலரது மூச்சு

தொலைபேசி போய்

செல்பேசி வந்து

அதனாலே சென்றான்

பலபேர் காசி

இனியாவது தோழரே, யோசி

வேண்டாம் இனி செல்லிடப்பேசி

எதையும் முடிக்கலாம் நேரில் சென்று பேசி.

வைத்துக் கொள்ளலாம் அவசர செய்திக்கு

வேண்டாமே அன்பின் செய்திக்கு.

முகம் பார்த்துப் பேசுவோம்

அகம் குளிருவோம்.


Monday, November 22, 2010

சோதனை ஓட்டம்

அலுவல் முடிந்து வீட்டிற்கு ஓடலாம் என நினைத்த சமயத்தில், ஆஃபிஸ் 2007 மூலமாக பதிவிடும் ஒரு சோதனை முயற்சி

Sunday, September 19, 2010

மீண்டும் தமிழகம்

ஆண்டுகள் இரண்டு
ஓடிவிட்டன உருண்டு

மும்பையின் புயல்வேக வாழ்க்கை
அதிரடியான அலுவலக வாழ்க்கை

என்றும் காதலிக்கும்
கண் எரியும் கணினிகள்,
என்றைக்கும் காதலித்திரா
கண்குளிரும் கவர்ச்சிக் கன்னிகள்,

காப்பிக் கோப்பையை
கை கோர்த்தபடியே
கூகிளில் காப்பியடித்த கோடுகள்.

ஒரு வார விடுமுறைக்கு
மாதக் கணக்கில்
கால் கடுக்கக் காத்திருந்த பொழுதுகள்.

வயிறு வாடினால் வடா பாவ்
நட்பு கூடினால் அர்ரே வாவ்

முடிந்தது மும்பை வாழ்வு நடந்தது நிறைய நிகழ்வு
அடைந்தது மனம் நிறைய நெகிழ்வு.

கிடைத்தது சென்னை செல்ல வாய்ப்பு.
அதற்குத்தான் எத்தனை நாளாய் எதிர்பார்ப்பு.

இங்கு செய்தவைதான் அங்கும்.
இருந்தும் அதற்கே மனம் ஏங்கும்.

பணம் சேர்க்க வந்தவன்
கூடவே சில நல்ல மனங்களையும்
கூட்டிச் செல்கிறேன்

போய்வருகிறேன் பம்பாய்
என்றைக்கும் என் நெஞ்சில் நீ இருப்பாய்.

Saturday, March 27, 2010

கடலைக் காதல்

அடம் பிடித்து
அழுகை புரிந்தால்
அது மழலை.

மனதில்
இடம் பிடித்து
அன்பு புரிந்தால்
அது கடலை.

கடலைக்கு
உதவிடவே
இறைவன் படைத்தானோ
கடலை?

மழலைக்குப் புரியாது
கவலை.
கடலைக்கணக்கு
சற்றே பிசகினும்
உன்னைப் பிரியாது
கவலை.

என்னவளும்
சில நேரம் மழலைதான்.
அவளுடன்
கழியும் காலமெல்லாம்
எனக்கில்லை கவலைதான்.

கடலை வேறு
காதல் வேறு
கடலை கடைசி வரை வாராது.
காதல் போக, வரவேண்டும் சாதல்.

காதலியின் கை பிடித்து
கடலை கொள்வேரே
காதலையும் கைப்பிடிப்பீராக.

சோகத்தில் முடிந்தால்
கவலை வேண்டாம்.
தினமும் குடிக்கலாம் பீராக.


Wednesday, March 10, 2010

கயல்விழியாள்

நாள்தோறும்
நங்கை உன்
நளினம் பார்த்திருப்பேன்.

தினந்தோறும்
தேன்மொழியாள் உன்
தீண்டலுக்குத் துடித்திருப்பேன்.

தூண்டில் போட்டு
பிடிப்பார்கள் மீனை.
உன் விழியென்னும் மீனோ
என்னைத் தூண்டிலிட்டுப்
பிடிப்பதும் ஏனோ.

நா அசைந்தால்
மொழி உருப்பெரும்.
நின் விழி அசைந்தால்
நான் உருப்பெறுவேன்.

என்னிதயம்
ஏய்த்துப் பறித்தவளே
என் காலம் பொய்த்துப்
போயினும்
என்றும் உனை
நினைத்திருப்பேன்.
பேச்சு நின்றும்
மூச்சு நின்றும்
நினைவிழந்து போனாலும்
நின்னை இழக்க மாட்டேன்.

Sunday, March 7, 2010

காதல் பறவை


பறவைகளும் காதல் புரியுமாம்.
அவைகள் புரிவது
பறவை மொழி.

நான் பார்க்கும் பாவை
புரிவது என்னவோ
பார்வை மொழிதான்.

அவள் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு
வேர்வை வழிதான்.
மனதெங்கும் வலிதான்.

இராட்சசி
இப்படிக் கொல்கிறாளே.
அவள் மனதில்
குடி கொள்கிறேன்
என்பதற்காக.

ஒரு பறவை
பிரிந்தால்
மறு பறவை
பரிதவிக்கும்.

என் பாவையவள்
பிரிந்தால்,
என்னிதயம்
ஏங்கும்.

"தூங்குனது போதும்
எந்திரிடா"

என எவரேனும்
எழுப்ப மாட்டாரா என.


Monday, March 1, 2010

ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை,

ஓய்வெடுப்பதற்கென்றே
ஒதுக்கப்பட்ட
ஓர் உன்னத நாள்.

முன்னைய இரவில்
கண்விழித்துக்
கதைபேசி
காலம் கழியும்.
பின்னைய பகலில்
வெகுநேரம்
படுக்கையில் புரண்டு
பொழுது புலரும்

பல்துலக்கி
அல்லது
அதனை விலக்கி
பலகாரம் சாப்பிட்டு
படை கிளம்பும்
பரிவாரம்.

என்னவோர் ஆரவாரம்
வாரா வாரம்.

நண்பர்களுடன்
நட்பு செய்தும்
வம்பர்களுடன்
வம்பு செய்தும்
வீட்டில் உறங்கியும்
தெருவில் இறங்கியும்
ஓடியும் பாடியும்
ஓய்ந்து முடியும் ஓய்வு நாள்

கடந்துவிட்டது தூரம்
மாறிவிட்டது நேரம்
அலுவல் சேர்ந்த நேரம்

சனியும் இல்லை
ஞாயிறும் இல்லை
தொடர்கிறது தொல்லை
இதற்கு இல்லையா ஓர் எல்லை?




Friday, February 26, 2010

சமையல் மொக்கை

கவிதை சமைத்த நாட்கள்
கடந்து போயின‌

சமையலறை
சமைக்கும் அறையாக‌
மாறியது ஒருவழியாக.

துணிமணிகள்
இருந்த இடம்
காய்கனிகள்
கண்காட்சியானது கடைசியில்.

சர்வர் சரியாக இருக்கிறதா
என சலிக்காமல் பார்த்து வந்தவன்
இப்பொழுதோ,
சாம்பார் சரியாக இருக்கிறதா
எனப் பார்க்கிறேன்.

மீசை மீது ஆசைகொண்டவன்
தோசை மீதும் ஆசைகொண்டு
வார்த்தெடுக்கிறேன்.

வருவது சரியில்லையெனினும்
வருத்தமில்லை.
நண்பர் இருக்கின்றனர்

ரோட்டோரக் கடையில்
முட்டைப் பொரியல்
கொரித்தவன்,
உதட்டோரம் எச்சில் வழிய‌
விழியோரம் நீர் வழிய‌
அரிகிறேன் வெங்காயம்.
பொரியப் போகும்
முட்டையை நினைத்து.

ஒரு நாளேனும்
தொல்லைகளிலிருந்து
தலை தப்புமா
என்றிருப்பவன்.
காலை எழுந்தவுடன் உப்புமா
என்கின்றேன் இன்று.

வாழ்வெனும் நாடகத்தில்
ஒரு பாத்திரமாய் இருந்தவன்.
சமையலறையில்
பாத்திரமோடு பாத்திரமாய்
பதுங்குகிறேன் இன்று.


மனதில் மகிழ்ச்சி
நெஞ்சில் நெகிழ்ச்சி
போய் வாங்க வேண்டும் இஞ்சி.
வருகிறேன்.

Sunday, February 21, 2010

வாழ்த்துக்கள்



தமிழ் மலையாளம் கலவை இவன்.
தமிழ்ப்புலமையில் ஒளவை இவன்

ஜாவா வாவா என அழைக்கும் இவனை
ஸ்காவா வாவா என அழைத்தது இவனை

புகைத்தே பொழுதைப் போக்குபவன் இவன்
கணினியின் எந்தப் பழுதையும்
பத்தே நொடியில் போக்குபவன் இவன்

பச்சைப் பட்டுக்கு அழகர் பிரபலம்
பச்சைப் பெட்டுக்கு பிரசாத் பிரபலம்

இவன் இருப்பது ஸ்காவாவின் பலம்.

எம் வி பி விருது பெற்றுள்ளான் நண்பன்
எம் சி பி விருது பெற காத்திருக்கின்றோம் நண்பர்கள் நாங்கள்

குறிப்பு :‍
கோவையில் ஸ்காவா நிறுவனத்தில் பணியிலிருக்கும் எனது நண்பன் பிரசாத் MVP விருது பெற்றமைக்காக எழுதப்பட்டுள்ள வாழ்த்து மடல்.
MVP - Most Valuable Player
MCB - McDowells Bottle


திருவள்ளுவர்



திருவள்ளுவர் சிலையைத் திறக்கப் போகிறார்களாம்
பெங்களூரில்.

என்றைக்கோ திறந்தாகிவிட்டது திரிஷாவின் சிலை
எங்களூரில்.

அட அற்பப் பதர்களா,
வீட்டுக்கொரு திருக்குறள் புத்தகம் தந்தால் போதுமே..
வண்ணத்தொலைக்காட்சியோடு
எண்ணத்தொலைக்காட்சியாக இருந்துவிட்டுப் போகட்டும்.


சிலை



கவி எழுத நினைத்தேன்
நிழற்படத்தைக் கண்டதும்
கூவி அழைத்தான் அணித் தலைவன்
நான் வேலையின்றியிருப்பதைக் கண்டதும்

பிறகென்ன,
கேவிக் கேவி அழவா முடியும்.
ஆவி அடங்கும் வரை அலுவல்தான்.

ஓர் அரைமணி, இவ்வாறு சிலை போல‌
நிற்க முடியாதா.
சொல்லடா நண்பா, சுப்பிரமணி


கிண்டல்



ரொம்பவும்தான் திமிர்பிடித்தவள் என்னவள்,
ஆமாம்.
வேட்டைக்காரனுக்கு முன்பதிவு செய்யட்டுமா
எனக் கேட்டதற்கு இப்படி நகைக்கிறாளே.

இவளைப் பற்றித் தெரியாதா என்ன.
குருவியை விரும்பிப் பார்த்தவள்தானே.

வரட்டும் தளபதியின் காவியம்
ஆகட்டும் தமிழ்த்திரையுலகம் நாசமயம்.

சீ சீ.. விஜய்மயம்.

கவலை



நமது அலுவலுக்கு இல்லையொரு வரைமுறை
விடுமுறை வரும் வரை,

ந‌மது அலும்புக்கு இல்லையொரு விடுமுறை
மயிர்நரை வரும் வரை.

எனது மனதுக்கு இருந்ததொரு மனக்குறை
சோறு சூடாக இருக்குமா
வீடுவரை போகும் வரை?!

Saturday, February 20, 2010

நண்பன் காதல் திருமணம்

இரவு நேரம்
நிலவும் உறங்கும் நேரம்
வழமைபோல் நான் கணினியின் ஓரம்

தரவுத்தளத்தில் தலையை
விட்டிருந்தேன்.
வலைத்தளத்தில் உலவவும்
மறக்கவில்லை.

வேட்டைக்காரன்
வேதனைப் பதிவுகளை
விவரித்திருந்தனர்
வலையுலக நண்பர்கள்

கவலையோடு
கண்ணும் கணினியுமாய்
கழிந்துகொண்டிருந்தது
காலமும்,
கணினியில் கானமும்

திடீரென வந்து குதித்தது
அச்செய்தி

மணமுடித்தேன்
என‌
மடலடித்திருந்தான் நண்பன்.

ஆகா,
கணினியை மட்டும்
காதலிக்கும் எங்கள்
கூட்டத்திலொருவன்
ஒரு கன்னியைக்
காதலித்து
கல்யாணமும்
செய்திருக்கிறான்.

முகம் மலர்ந்தது
அகம் குளிர்ந்தது

நண்பனே
இடரற்று
சுடர் பெற்று வாழ்ந்திடு
வாழ்நாளெல்லாம்

பாண்டிய மன்னன்
பெயர்கொண்டவனே
உனதவளுக்கு மன்னனாய் இருந்து
வேண்டிய விருப்பங்களை
செய்தளித்து சீருடன் வாழ‌
வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

வெட்கம்

பெண்ணே,
ஏனடி வெட்கப்படுகிறாய்,
இந்த சங்கிலியாக நான் பிறந்திருக்கக் கூடாதா என நான் கூறியதாலா?
இல்லை, இப்படியே உற்று நோக்கினால் இது கவரிங் என கண்டுபிடித்துவிடுவேன் என நினைப்பதினாலா?

போதை


மரத்தினோரம் ஓரக்கண்ணில் பார்ப்பவளே,
புத்தகங்களோடு என்னிதயத்தையும் அள்ளிச் செல்பவளே,
திருப்பிக் கொள் உன் பார்வையினை.

நேற்றடித்த பார் போதை போதுமெனக்கு,
உன் பார்வைப் போதை வேண்டாம் இப்போதெனக்கு.



காதல் கோலம்



அடப்பாவி,
இவ்வளவு அழகாக கோலம் வரையத் தெரியுமா உனக்கு?
இதென்ன கோலம் என்னவளே,
உன்னைக்காணும் போதெல்லாம் பெருவிரலால் நானிடும் கோலங்களை விடவா.
*
*
*
*
*
அடச்சே, அவனா நீ.


சர்வசக்தி

அன்பே,
நீ கண்சிமிட்டினால்,
மலைகளைத் தகர்ப்பேன்,
கடல்களைக் கடப்பேன்,
தங்கத்தில் உன் அங்கத்தை நனைப்பேன்,
சுடுமணலில் நெடுநேரம் கிடப்பேன்,
நடுநிசியிலும் உறங்காது உன்னை நினைப்பேன்,
ஏன்,
வில்லு படத்தைக்கூட பலதடவை பார்ப்பேன்

ஆனால்,
நம் குழந்தைக்கு இப்பொழுதே எல்கேஜி அட்மிஷன்
வாங்க வேண்டுமென்று கேட்பது என்ன நியாயம்.

நான் என்ன அவ்வளவு சக்தி படைத்தவனா?

மழைக்காலம்

மும்பையில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது ஒருவழியாக‌
சிலருக்கு மகிழ்ச்சி,
சிலருக்கு வருத்தம்,
சிலருக்கு ஒன்றுமில்லை,

முதல் சிலர் - மழையில் விளையாடும் சிறார்கள்
இரண்டாம் சிலர் - ஓய்வை நெருங்கும் நிலையில் வேலை செல்லும் முதியவர்கள்
மூன்றாம் சிலர் - போடாங். மழை பெய்தாலும், பெய்யாவிடினும் கொலைவெறியுடன் வேலை செல்லும் கருமம்பிடித்த கணிப்பொறியாளர்கள்

வாழ்க்கைச் சக்கரம்

என்னவளே,
இன்றிலிருந்து நீ என்னிலிருந்து பிரிந்து,
இன்னொருவனுடையவ‌ளாகலாம். ஆனால் என்ன‌,
என்றோ ஒருநாள் ஜன்னலோரமாய்க் கண்ட‌
உன் தங்கை முகம் மறக்கவில்லை
இன்றைக்கும். உறுதியாய்ச் சொல்கிறேன்,
என்றாவது ஒருநாள் நிச்சயம் விளிப்பேன் அவளை,
என்னவளே.

சமர்ப்பணம் : எனதருமை நண்பர் வெண்ணல்ராஜ்

காதல் பரிசு

இரவெல்லாம் விழித்திருந்து,
கடுமையாக யோசித்தேன் கவிதை வரைய.
இறுதியாகக் கிடைத்தது.

கவிதை அல்ல.
என் காதலியின் கணவன் தந்த உதை.


இடி மழை

வானம் சும்மாயிராமல் அடிக்கடி இடி இடியென சிரித்துக்கொண்டிருந்தது.
கோபங்கொண்ட‌
மேகக் கூட்டங்கள் வானைச் சூழ்ந்து கொண்டன.
காலிப் பயல்கள் என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை
வானம் பொலபொலவென்று கண்ணீர் சிந்துகிறது.

யாராவது சென்று விசாரியுங்களேன்.

கடன்

கடனாக சில‌ கவிதைகள் கொடு,
கண்டிப்பாகத் திருப்பித் தருகிறேன்.
கடன் அன்பை முறிக்கும் என்பதற்காக அல்ல.
அதைப் படிக்கும் எனது நண்பர்கள் அடிக்கும் அடி
எனது எலும்புகளை முறிக்கும் என்பதற்காக‌.

Friday, February 19, 2010

நினைவு

வேப்பமர நிழல்
கண்மாய் குளியல்
முங்கு நீச்சல்
புளியமர ஊஞ்சல்
களத்துமேட்டுக் கபடி
ஆரெஸ்பதி மரத்தில் கல்வெட்டு
தேன்தட்டு வேட்டை
கூட்டாஞ்சோறு
ஆறாங்கிளாஸ் நண்பர்கள்
பன்னீர் சோடா
பால் ஐஸ்
இலந்தப்பழ ஜூஸ்
சஞ்சாயிகா சிறுசேமிப்பு
சோத்து முறுக்கு.

இவையாவும் மறந்துபோயின கால ஓட்டத்தில்.
டவுண் பஸ் பயணம் கால் டாக்ஸி ஆனது
மேலக்கடை டீ காஃபிடே ஆனது
அளவெடுத்த சட்டை ஸ்கார்பியோ ஆனது
பேரகான் பெயரே மறந்து போனது
போஸ்டாபீஸ் ஃபோன் வேஸ்ட் ஆனது
இன்லேண்ட் லெட்டர் இமெயில் ஆனது.

எல்லாம் மறக்கலாம்
எல்லாம் மாறலாம்.

என் தமிழ் மறக்காது.

வந்துவிடாது அதற்கு ஒரு முடிவு.
சீக்கிரம் வரும் நல்ல விடிவு.

தண்ணீர் கண்ணீர்

வானம் தூற ஆரம்பித்துவிட்டது
ஆவலோடு எட்டிப்பார்க்கிறாள்
எதிர்வீட்டுச் சுட்டிப்பெண்
அப்படியென்ன ஓர் ஆர்வம் அதில்.
பள்ளிக்குச் செல்லாமலே
பாடம் படிக்கிறாளோ.
மழையில் என்ன பாடம் இருக்கப்போகின்றது
அறிவியலா, தத்துவமா?
வங்கக் கடல் ஆவியாகி மழையானதா
அதன் நடுவில் இருக்கும்
இலங்கை மக்கள் விட்ட கண்ணீர் மழையானதா
வங்கக் கடல் தண்ணீர் வற்றுமா
என் இனமக்கள் கண்ணீர் வற்றுமா

வார இறுதி

வெள்ளி மாலை
நாளை அலுவல் உண்டா இல்லையா
பரபரப்பு எதிர்பார்ப்பு
இரவு நெருங்க நெருங்க இதயத்துடிப்பு
மாலை நேர மயக்கம் இதுதானோ
இல்லத்தாள் பிரசவ அறையில் இருக்கையில்
இப்படித்தான் இருக்குமோ
ஆகா
மணம் முடிக்காமலேயே
மனைவி
மருத்துவமனை
மகவு


சொற்பொழிவு

பெண்ணடிமை ஒழிப்பு
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
தீண்டாமை ஒழிப்பு

கோபம் கொப்பளிக்க‌
மேடையில் வாய்கிழியப் பேசிவிட்டு
வீடுதிரும்பினேன் களைத்து

கோபம் அடங்குமா எனப் பார்த்தால்
கொதித்துக் கிளம்பியது மேலும்.

கவிதை வரைகிறாளாம்
கணவனுக்குக் கால் அமுக்கிவிடாமல்

பெண்ணுக்கெதற்கடா பேனா.

அடேய் பொடிப்பயலே
ஓடிப்போய் தீப்பெட்டி வாங்கி வா.
அவசரத்தில் அந்தத் தாழ்ந்த சாதிக்காரன்
கடையில் போய் வாங்கிவிடாதே

குடிக்கிற கால்வயிற்றுக் கஞ்சியிலும்
கைவைத்து விடுவேன்.

சீக்கிரம் வா, இதைக் கொளுத்திவிட்டு,
வேறு வேலை இருக்கிறது எனக்கு.
உரை தயாரிக்க வேண்டும் நாளை மேடையில் பேச.
பாரதியும் நானும்.

தவறவிட்ட பட்டமளிப்பு விழா

மூன்றாண்டு காலம்
மறக்காது எந்நாளும்

வகுப்பில் இருந்த நாட்கள் குறைவு
இருப்பினும்
மனம் மகிழாமல் இருந்த நாட்கள் குறைவு

வாசித்த புத்தகங்கள் குறைவு
இருப்பினும்
நேசித்த நெஞ்ச‌ங்களில் இல்லை குறைவு

பெற்ற மதிப்பெண்கள் குறைவு
இருப்பினும்
கற்ற நற்பண்பினில் இல்லை குறைவு

அன்று கல்லூரி செல்லாமல் இருந்தமைக்காக‌
ஒருநாளும் வருந்தியதில்லை.
இன்று செல்ல முடியாமல் போனதற்காக‌
நான்கொண்ட வருத்தம்
ஒருநாளும் குறையப் போவதுமில்லை.

எல்லாம் இருப்பினும்
மனதில் மாபெரும் நிறைவு.

இந்த நாளில் என் நண்பர்களில்
எவரேனும் ஒருவராவது
என்னை நினைத்திருப்பார்கள் அங்கு.
அதுபோதும் எனக்கு

என் நினைவுகள்
கல்லூரியை முத்தமிட்டிருக்கும்.
காலமெல்லாம் அது நிலைத்திருக்கும்.

நண்பன் பிரிவு

நண்பன் பிரிந்து செல்லலாம்.
நட்பு பிரிவதில்லை

உடன்பிறந்தவனில்லை.
நான்காண்டுகள்
உடனிருந்தவன்

இடர் நேரங்களில்
நட்பெனும்
சுடர் ஏற்றியவன்

எதுவும் செய்திடவில்லை பிரமாதமாய்
அதுவே தெரிகின்றது பிரமாண்டமாய்.

இணைபிரியா நண்பர்கள்
என்பார்கள்
ஆம்
இணைக்கு ஏது பிரிவு.

இணைபிரியாமல் இருந்தவன்
சென்னை செல்கிறான்.

வாய் பிரியாமல்
வாழ்த்துச் சொல்லியனுப்புகிறேன்.

குதூகலிக்கும்போது
குறுஞ்செய்தி அனுப்பு

தோன்றினால் தொலைபேசு

நேரம்கிடைத்தால் நேரில் வா

மணாளினி அமைந்தால் மடல் அனுப்பு.

முகவரியை மறக்காதே
என் மடலுக்கு பதில் வரி மறக்காதே.


Saturday, February 13, 2010

காதலர் தினம்

வந்துவிட்டது காதலர் தினம்
காதலருக்கெல்லாம் கொண்டாட்டம்
கலாச்சாரக் காவலருக்கோ திண்டாட்டம்.

காதலர்கள் முத்தமழை பொழிவார்கள்
காவலர்கள் யுத்தமழை பொழிவார்கள்

துணைவருக்குத் தூதனுப்ப‌
பேனா பிடிப்பர் காதலர்
சிவசேனா பிடித்த பெருமக்களோ

ஓடிச்சென்றுபிடிப்பர்
அன்பைப் பரிமாறும் காதல் புறாக்களை.

காதலைக் கண்டால் காத தூரம்
ஓடுவது ஏன்.
மனதில் ஈரம் இருக்கும் மனிதன்
காதலில் விழ ஆகாது வெகு நேரம்.

காதலைப் போற்றாவிடினும் போகட்டும்
தூற்றாதிருப்போம்.
அன்பிற்கு எதிரான வன்மத்தை
மனதில் ஏற்றாதிருப்போம்.

காதலர்களே,மகிழ்வுடன் வாழ்ந்திருங்கள்.
என் இனிய வாழ்த்துக்களோடு.

Thursday, February 11, 2010

தூக்க துக்கம்



தூக்கம் வரும் நேரமெல்லாம்
கூடவே வரும் ஓர் ஏக்கம்.

நாளைக்காவது சீக்கிரம் வராதா.

துயில் எழுகையிலெல்லாம்
கூடவே எழும் ஒரு துக்கம்.

நாளைக்காவது தாமதிக்காதா.

கவிதை கூறியதும் நண்பன் கூறினான்
உன் மொக்கை வரும்பொழுதெல்லாம்
கூடவே வரும் ஒரு கலக்கம்.

இன்றைக்குமா..??

பன்றி நடுக்கம்

சென்னையில் நிலநடுக்கம்

மும்பையில் மன‌நடுக்கம்

சென்னையில் கட்டிடங்கள் குலுங்கின‌
மும்பையில் மருத்துவமனைகள் நிரம்பின‌

நாலுகால்ப் பாய்ச்சலில் வரும்
பன்றிக் காய்ச்சலினால்
பதறிப் போய் உட்கார்ந்திருக்க‌
ஊரிலிருந்து ஃபோன்.

"ரொம்ப ஆடாதடா, இங்க நாங்க ஆடறது போதும்"

ஆட்டமென்ன பாட்டமென்ன‌
வீடு ஆடினால் ஓட்டமெடுப்பதன்றோ முக்கியம்.

நாங்களோ, இங்கு முகமூடியோடு ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நிலம் ஆடுவது அடங்கட்டும் அங்கே.
பன்றிக்காய்ச்சல் வீரியம் விரைவில் குன்றட்டும் இங்கே.

சுதந்திரதின கொண்டாட்டம்

சாதிச் சண்டையில் நூறு பேர் பலி
இளம்பெண் கற்பழித்துக் கொலை
வீட்டில் புகுந்து துணிகரக் கொள்ளை
லஞ்ச ஊழலில் அதிகாரி கைது
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை
கடன் தொல்லையால் தற்கொலை
டீக்கடையில் அரிவாள் வெட்டு

அடச்சே

சுதந்திரதின சிறப்புத் திரைப்படங்கள்
விமர்சனம் படிக்கலாம் என‌
நாளிதழ் படிக்கையில் எவ்வளவு இம்சைகள்.

படம் பார்க்காமல் எப்படிக் கொண்டாடுவது.

நயன்தாராவின் நயமான பேட்டி
எதில் வருகிறது எனத் தெரியவில்லையே.
அந்தகோ. என்னவொரு கொடுமை.

சுதந்திரம் கிடைத்துதான் என்ன பயன்.

அடிமை முதலாளி



காளையை அடக்கினால்
கன்னி கிடைத்தாள் அன்று.

கணினியை அடக்கினால்
வேலை கிடைக்கிறது இன்று.

என்ன அடக்கி என்ன பயன்
வார இறுதியிலும்
அலுவலில் அடங்கிக் கிடக்கும் அடிமைகளுக்கு.

ஆகா, என்னவொரு வேடிக்கை.
ஓர் அடிமை
இன்னோர் அடிமையை
அடக்கி ஆள்கிறது.

கை நிறைய கூலி வாங்கிக்கொண்டு, அதுவும் !

வன்முறைக்காரி

இரட்டைக் குழல் துப்பாக்கியிலிருந்து
புறப்பட்ட தோட்டாக்கள் போல‌
இரண்டு புன்னகை அம்புகள் என்னைத் தாக்கின.
பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது.
ஆம். என்னவள் செய்த மாயம் அது.

மீண்டுமொரு மாயம் செய்தாள்.
மருந்தெனும் விருந்து வைத்தாள்.

முத்துப் புன்னகைகளை முகத்தில் வீசியெறிந்தாள்.

காயம் ஆறவில்லை.
காலம் ஓடவில்லை.

காயத்தைக் காதலிக்க வைத்தாள்.
காதற்கடலில் தத்தளிக்க வைத்தாள்.

சீக்கிரம் என்னைக் காதலிக்கச் சொல்லுங்கள் அவளை.
கொடுமைக்காரி எனக் காவல்துறை அவளைக்
கைது செய்து அடைக்கும் முன்பாக.

என் இதயச் சிறை அவளுக்காகக் காத்திருக்கிறது.

பெயரில்லாப் பெண்

பெண்ணே, உன் பெயரென்ன.
சீக்கிரம் சொல்லிவிடு
உன் காதலி யார் என நண்பர்கள்
கேட்கும்பொழுதெல்லாம்
என் இதயத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரி
எனச் சொல்ல முடியவில்லை என்னால்.

இல்லையேல் கொலைகாரியாய் மாறி
என்னைக் கொன்றுவிடு.
ஆவியாகிவிட்டால் யார்கண்ணிலும் படாமல்
உன்னைத் தினமும் தரிசிப்பேன் அல்லவா.

கடி

இரவெல்லாம் கொசுக்கடி
நசுக்கிக் கொன்றேன் அடிக்கடி

முகமெல்லாம் வீக்கம்
வரவேயில்லை தூக்கம்
மனமெல்லாம் துக்கம்
அறையெல்லாம் ஆல்அவுட் நாற்றம்
இருந்தும் ஏற்படவில்லை மாற்றம்
காசுகொடுத்து வாங்கியும் ஏமாற்றம்
என்ன காரணம்ஊரெங்கும் மழையின் சீற்றம்

வீடெங்கும் கொசுக்களின் கூட்டம்
இல்லை அதற்கு மரணிக்கும் நாட்டம்
கொசுவர்த்தி வாங்கியே எனக்கு நட்டம்.


Sunday, February 7, 2010

மொக்கைக் குறிப்புகள்

ஊர் சென்று திரும்பினேன்
நண்பர்களிடம் செல்ல‌
விரும்பினேன்
எத்தனை முயன்றும்
முடியவில்லை
மனம் வருந்தினேன்
சிலபேருக்குத்
தொலைபேசியைச்
சுழற்றினேன்
பல நாள் பாரத்தைக்
கழற்றினேன்
கடற்கரையில்
சுற்றித்திரிய நினைத்தேன்
அடுப்பங்கரையில்
சுற்றித் திரிந்தேன்
தீனியெல்லாம்
தின்று தீர்த்தேன்
நெருங்கிவிட்டது
திரும்பும்காலம் என‌
உடம்பெங்கும் வேர்த்தேன்
வருவது வரட்டும் என‌
கடைசி தோசையை வார்த்தேன்.
தக்காளி சேர்த்துச் செய்த ஆம்லெட் நெகிழ்ந்தது
மனம் மகிழ்ந்தது.
ஆசையாய்ச் சாப்பிட்ட அண்ணனுக்கோ
முகம் நொந்தது.

என்ன செய்வது
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
செய்ததெல்லாம் ருசித்துவிட்டால்
ஹோட்டல் தேவையில்லை